ஐயகோ.. ஐயா வைகோ.... மதிமுவுக்கு வாய்த்த லேடி நாஞ்சில் சம்பத் வீரலட்சுமி!
மதிமுக பொதுச்செயலர் வைகோ தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை ஏசுவை சிலுவையில் அறைந்ததுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி.
சென்னை: அரசியலில் மதிமுகவுக்கு ஏறுமுகம் எப்போதும் கிடைத்தது இல்லை... ஆனால் பேச்சாளர்கள் ஏராளமாக நிறைந்து கிடக்கிற 'பேரியக்கமாக' திகழ்கிறது மதிமுக. தற்போது மதிமுகவுக்கு வெளியில் இருந்து செய்தி தொடர்பாளரைப் போல கிடைத்திருப்பவர் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி.
சட்டசபை தேர்தலின் போது திடீரென மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தவர் வீரலட்சுமி. மதிமுக பொதுச்செயலர் வைகோ தமது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வீரலட்சுமியை வேட்பாளராக நிறுத்தினார். பம்பரம் சின்னத்தில் போட்டியிட்ட வீரலட்சுமி படுதோல்வியை சந்தித்தார்.
இந்த தோல்விக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு வெளியேறினார் வீரலட்சுமி. அத்துடன் முன்னர் நடத்தியது போல பரபரப்பு போராட்டங்களையும் நடத்தாம ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு மட்டும் வருகிறார் வீரலட்சுமி.
இதனிடையே தேசதுரோக வழக்கில் வைகோ வாலண்டியராக சிறைக்கு சென்றார். இது தொடர்பாக பதறிப் போய் வீரலட்சுமி தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
உலக மனித பாவத்திற்காக மகா புனிதர் ஏசுபிரான் சிலுவையில் ஏற்றும் பொழுது
அவரால் அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முடிந்திருக்கும்.
ஆனால் அவர் சிலுவை மரத்தை விரும்பி ஏற்றார்.
பாவிகளின் கண்கள் திறக்க.
ஐயா வைகோ அவர்கள்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை தமிழர்களின் நெஞ்சத்தில் கொழுந்து விட்டு எரியும் எரிமலையாய் கொதித்து கொண்டிருக்கும் பொழுது
அது வாடை காற்றுப்பட்டு சாம்பல்கள் மூடிவிடக்கூடாது என்பதற்காக உயர் சிந்தனையோடு உயர் செயலோடு
தன்னை தானே அர்ப்பணித்துகொண்டு ஐயா வைகோ அவர்கள் சிறைச்சென்றுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட 1 1/2 லஞ்சம் தமிழர்களின் அவல குரல் ஐயா வைகோவின் சிறைவாசத்தால் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
வானம் அதிர்ந்து பிளந்து போக
இளைஞர்களின் இரத்தம் கொதித்து
ஆவியாக வேண்டும்
நரம்புகள் புடைத்து
வேலாக வேண்டும்
புலிகள் கால் தரித்து
இலக்கை நோக்கி
வரி புலியாய் பாய வேண்டும்.
எழுவாய் தமிழா !புலியாய்!
இவ்வாறு வீரலட்சுமி பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவைத் தொடர்ந்து மதிமுகவுக்கு கிடைத்த 'லேடி' நாஞ்சில் சம்பத் என்ற பட்டமும் கிடைத்திருக்கிறது கி. வீரலட்சுமிக்கு..