நெல்லையில் காய்கறி வியாபாரி மர்மகாய்ச்சலுக்கு பலி: டெங்கு என அச்சம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்குவுக்கு இரண்டு சிறுவர்கள் பலியான நிலையில் காய்கறி வியாபாரி ஒருவரும் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சப்பாணிலெப்பை தெருவை சேர்ந்தவர் நாசர். அவர் மேலப்பாளையத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவருக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. இந்த நிலையில் அவர் திடீரென நேற்று மாலை மரணம் அடைந்தார்.
இது குறித்து அவரது சகோதரர் கூறுகையில்,
எனது சகோதரருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அவரை கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தத்தில் பிளேட்லெட் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். எனவே அவருக்கு டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். ரத்தமும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊசி போடப்பட்டு வந்ததால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால் நேற்று காலை முதல் அவருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகரித்தது.
இந்நிலையில் அவர் மாலை இறந்து போனார். அவர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அச்சப்படுகிறோம் என்றார்.
இதனால் மேலப்பாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் முக்கூடல் தாளாளர்குளத்தில் டெங்குவுக்கு இரண்டு சிறுவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications