தக்காளி விலை உச்சத்தில்... கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி
சென்னை: சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலும் உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதே நேரத்தில் கத்தரிக்காய் கிலோ 5 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.25க்கும் விற்பனையானது.
இந்நிலையில் மே மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்ததால் தக்காளியின் விளைச்சல் 30% அளவு குறைந்து, தற்போது தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 80 லாரிகளில் தக்காளி வந்து சேரும். ஆனால், தற்போது 30 லாரிகள் மட்டுமே வருவதால் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆரணி, தருமபுரி, உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவு தக்காளி போய் சேரவில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வாங்கி விற்கும் மளிகை கடைக்காரர்கள் ஒரு கிலோ தக்காளியை ரூ.100, சில கடைகளில் ரூ.110க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மேலும் பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
அவரைக்காய், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீட்ரூட் கிலோ 22 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 16 ரூபாய்கும், கேரட் கிலோ 25 ரூபாய்க்கும் ஒரு தேங்காய் 10 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை சதமடித்துள்ள நிலையில் கத்தரிக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே குறைவான விலைக்கே கத்தரிக்காய்கள் விலை போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தள்ளனர். 7 கிலோ கொண்ட கூடைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை மட்டுமே ஏலம் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1 கிலோ கத்தரிக்காய் வெறும் ரூ.2 முதல் ரூ.5 வரை மட்டுமே ஏலம் போவதால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளதால் கலக்கமடைந்துள்ளனர். விலை வீழ்ச்சி காரணமாக போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். விலை பொருட்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரியுள்ளனர்.