கேரளாவின் ஓணம் விருந்துக்கு போகும் ஒட்டன் சத்திரம் காய்கறிகள்
திண்டுக்கல்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து தினசரி சுமார் 700 டன் காய்கறிகள் கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல கன்னியாகுமரி மாவட்ட சந்தைகளிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள், பூக்களின் வியாபார விற்பனை சூடுபிடித்துள்ளது.
திருவோண தினத்தன்று தங்களை காண வரும் மகாபலி மன்னன் வரவேற்கும் விதமாக மலையாள மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சியுடன், ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை உள்ள பத்து நாட்களும் ஒணம் சதய எனப்படும் அறுசுவை உணவை மக்கள் சமைத்து உண்பர்.

விருந்து உற்சாகம்
ஓணம் என்றாலே அத்தப்பூ கோலத்தைப் போலவே சைவ சமையலும் முக்கிய பங்கு வகிக்கும். ஓணம் பண்டிகை நாளில் ஓணசத்தியா விருந்து பரிமாறப்படும். இந்த விருந்தில் காய்கறிகளால் ஆன அவியல், பொரியல், ஓலன், சக்கவரட்டி, எரிசேரி, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி உள்ளிட்ட 20க்கும் மேற்கட்ட காய்கறிகளால் தயார் செய்யப்பட்ட விருந்தும், சக்கப்பிரதமன், அடபிரதமன் 3 வகை பாயாசம் தயார் செய்யப்படும்.

குமரியில் கொண்டாட்டம்
இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் ஏராளமான மலையாள மக்கள் வசிப்பதால், இங்கும் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒணம் பண்டிகைக்கான காய்கறிகள், வாழை பழங்கள் மற்றும் பழ வகைகள் வாங்க குமரி மாவட்ட சந்தைகளுக்கு வருகை தருகின்றனர்.

காய்கறி விற்பனை
மார்த்தாண்டம், கருங்கல், களியக்காவிளை உள்பட பல்வேறு சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் பண்டிகை
இதேபோல கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான திருப்பூர், கோவை மற்றும் தமிழகத்தில் வாழும் கேரள மக்களாலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுவதால் அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

ஒட்டன்சத்திரம் காய்கறிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து அதிக அளவு கேரளாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதம் கேரளாவுக்கு மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

700டன் காய்கறிகள்
கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்த ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுறு சுறுப்படைந்துள்ளது. தினசரி சுமார் 700 டன் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வரத்து அதிகரிப்பு
ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை உற்பத்தி செய்து ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஓணம் பண்டிகை வரை தினசரி 1000 டன்னுக்கு காய்கறிகள் அனுப்ப வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலிவான விலையில்
காய்கறிகள் விலை நிலவரத்தை பொறுத்தவரையில் வெண்டைக்காய் கிலோ ரூ.9, பீட்ரூட் ரூ.5, பயறு ரூ.10, முருங்கைக்காய் ரூ.11, வெங்காயம் ரூ.25, சுரைக்காய் ரூ.3, பூசணிக்காய் ரூ.6, கொத்தவரை ரூ.5, பச்சைமிளகாய் ரூ.20, கத்தரிக்காய் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.220, தக்காளி 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.60 என்று அனைத்துமே மலிவான விலையிலேயே கிடைக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications