வேளாங்கண்ணி போகபோறீங்களா.. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் குட்நியூஸ்
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா தொடங்க உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா தொடங்க உள்ளதால் பலரும் அடுத்த இரண்டு வாரத்திற்கு வருவார்கள். பல லட்சம் பேர் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பஸ்கள் 25-ந்தேதி (நாளை) முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் முன்பதிவு செய்து, வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இச்சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications