அசாத்திய திறன்கள்... அசத்தும் அரசு ஆரம்ப பள்ளி குழந்தைகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவ மாணவிகள் தங்களின் அசாத்திய திறன்களால் எல்லோரையும் ஈர்த்து வருகிறார்கள்.
வேலூர்: வேலூர் மாவட்டம் ராஜாவூரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு திறன்களால் எல்லோரையும் ஈர்த்து வருகிறார்கள்.
ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஒரே ஒரு உதவி ஆசிரியரைக் கொண்டு இயங்கும் அரசுப்பள்ளி ராஜாவூரில் உள்ளது. இந்தப் பள்ளியில், 36 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை அரவணைப்புடன் கவனித்துக் கொள்ளும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகளுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் விதம் அனைவரையும் அசர வைக்கிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமையும் நிச்சயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏ.பி.சி.டி. என்று பிள்ளைகள் படித்தால் பெற்றோர் பூரிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு மாணவன் அதை தலைகீழாக ஒப்பிக்கும் விதம் அனைவரையும் ஈர்க்கிறது.
ராஜாவூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தக அறிவு மட்டும் அல்லாமல், பொது அறிவும் புகட்டப்படுகிறது. 1,330 திருக்குறள்களையும் மனப்பாடமாக படித்து ஒப்பித்துக் காட்டி தமிழக அரசிடம் பரிசு பெற்ற வென்ற மாணவி சினேகா என்பவர் இந்தப் பள்ளியில் படிப்பவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பள்ளி மாணவ - மாணவிகள் வென்றுள்ள கேடயங்கள், பரிசுக் கோப்பைகள், நினைவுப் பரிசுகள் ஏராளம். மாணவர்களின் வெற்றி தான் தமது லட்சியம் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " அரசுப் பள்ளியில் மாணவ மாணவர்களை சேர்க்குமாறு நாங்கள் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறோம். பள்ளியில் உள்ள வசதிகளையும், அரசுப்பள்ளியில் படிப்பதால் உள்ள நன்மைகள் பற்றியும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை குறித்தும் பெற்றோர்களுக்கு நேரடியாக நாங்கள் சொல்லி வருகிறோம். இதனால் இந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு கூடுதல் மாணவ மாணவிகள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே கல்வி என்று நினைக்கும் மக்கள் மத்தியில் ஏட்டுக்கல்வியோடு பொது அறிவு கல்வியும் வழங்கும் இந்தப்பள்ளி மாற்றுச் சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டிதான்.