சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: வேலூரி்ல் 106 டிகிரி - 13 இடங்களில் சதமடித்தது
சென்னை: தமிழகம், புதுவையில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது, மே 29ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலம் நடைபெற்று வருவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன மழை பெய்ததால், ஒரு வார காலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததையடுத்து, மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களிலும் புழுக்கம் காணப்படுகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாள்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
சராசரி வெப்ப நிலை 104 டிகிரியாக பதிவாகும். இருப்பினும் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்யக் கூடும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
பல நகரங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்டில்):
வேலூர் 106
மதுரை, சென்னை 105
புதுச்சேரி, திருச்சி 104
சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை 103
கடலூர் 102
நாகப்பட்டினம், காரைக்கால், தருமபுரி 101
திருப்பத்தூர் 100