விவசாயிகள் மரணத்தை வேடிக்கை பார்ப்பதா? வறட்சி மாநிலமாக அறிவியுங்கள் - தி. வேல்முருகன்
விவசாயிகள் மரணத்தை ஆள்பவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் தற்கொலையை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
விவசாயிகள் மரணத்தைக் கொச்சைப்படுத்திய அமைச்சர் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தார். விவசாயிகள் மரணம் பற்றி தெளிவற்ற முறையில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நாடராஜனை கடுமையாக சாடிய வேல்முருகன், வெல்லமண்டியா? வெங்காய மண்டியா பேரைப்பாருங்க என்றார்.
இன்றைக்கு தமிழகத்தை ஆளும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒதுக்கப்பட்டுள்ளார். ஒரு ஓரத்தில் நிற்க வைக்கப்படுகிறார். அவர் வெறும் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டுவிட்டது. இனி மின்சார கட்டணம் 3 மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்றார் வேல்முருகன். இதே போல நீட் தேர்வு இனி நடத்தப்படும். இதனால் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் நகரத்தில் வசிப்பவர்களுடன் போட்டி போட முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் வறட்சியினால் ஏராளமான விவசாயிகள் மரணமடைந்து விட்டனர். விவசாயிகள் மரணத்தை ஆள்பவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார் வேல்முருகன்.
கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளின் வஞ்சகத்தாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போய்விட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தாண்டவமாடும் வறட்சியின் கோரப்பிடியை தாங்க முடியாமல் விரக்தியில் இதுவரை ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியிலும் உயிரிழந்து விட்டனர்.
ஆகையால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் தர வேண்டும். விவசாயிகள் குடும்பங்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.