சட்டசபை மாண்பை குலைக்கும் சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது: வேல்முருகன்
சட்டசபை மாண்பை குலைக்கும் சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இன்று நடந்தேறிய சம்பவங்கள் மிகுந்த வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடரக் கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அதே நேரத்தில் நாற்காலிகளை வீசுவது, தாள்களை கிழிப்பது என தொடங்கி உச்சகட்டமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேரவைத் தலைவர் கையைப் பிடித்து இழுப்பது; உடையை கிழிப்பது என அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போற்றுதலுக்குரிய பேரவைத் தலைவரின் இருக்கையை ஏதோ விளையாட்டுப் பொருளாக கருதி சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் நிச்சயம் அருவருக்கத்தக்கது. ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
அதேபோல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவை காவலர்களால் தாக்கப்பட்டு அவரது சட்டை கிழிக்கப்பட்டது என்பதும் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபை காவலர்கள் கையாண்ட விதம் ஏற்புடையது அல்ல.
இன்றைய இளையசமூகம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராட வீதிக்கு வரத் தொடங்கியுள்ள புரட்சிகரமான சூழலில் அரசியல் என்றாலே இத்தகைய அநாகரிகங்களின் உறைவிடம் என எண்ணு ஒதுங்க வைக்கும் இதுபோன்ற அநாகரிகங்கள் இனியும் சட்டமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் நடந்துவிடக் கூடாது.
இன்றைய நிகழ்வுகளே தமிழ் மண்ணில் ஜனநாயக மரபுகளையும் மாண்புகளையும் சீர்குலைக்கும் இறுதி சம்பவங்களாக இருக்கட்டும்; இவை தொடரக் கூடாது என்று அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications