மேகதாது அணை... கர்நாடகாவின் பிடிவாதம்.. மத்திய அரசு அலட்சியம்... வேல்முருகன் கண்டனம்
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதூது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட ரூ5192 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார். சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையில் தமிழர்களை சீண்டும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சித்தராமையாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்தை தொடர்ச்சியாக கர்நாடகா வன்சித்து வருகிறது. தற்போது குடிநீருக்காக என புதிய தடுப்பணைகள் கட்டி, பல லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு காவிரி நீரை திருப்பிவிடப் பார்க்கிறது கர்நாடகா அரசு.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்குகள் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே இப்படியான அடாவடிகளில் கர்நாடகா அரசு ஈடுபட்டு வருகிறது. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது.
இந்த மவுனம், காவிரியை கபளீகரம் செய்யும் கர்நாடகாவின் சதிக்கு உடந்தையாகவே இருக்கிறது. மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவுன் வன்மையாகக் கண்டிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உடனே அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை இனியும் தாமதிக்காமல் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க- காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வரும் 19-ந் தேதியன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் பங்கேற்று முழு ஆதரவு தர வேண்டும் என்றும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications