தனியாக தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஆளுநர்: வேல்முருகன் சாடல்
தன்னிச்சையாக செயல்படும் தமிழக ஆளுநருக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை : செயல்படாத தமிழக அரசைக் கலைப்பதை விடுத்து தனியாக தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்கிறார் ஆளுநர் என்று விமர்சித்து உள்ளார் வேல்முருகன்.
சமீபத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநரின் இந்த செயல் மாநில சுயாட்சி உரிமை அதிகாரங்களில் தலையிடுவது ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற பதவி உருவாக்கப்பட்டு அதற்கு தனியாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நண்டு வலையில் தங்காது
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் பதவி என்பது 'அப்பாவி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தைத் தின்றுதீர்த்துச் செரித்து ஏப்பம்விட்டுக் கொழுக்க' ஏற்படுத்தப்பட்ட பதவி என்பது அனைவருமே அறிந்த உண்மை. அதனால்தான் 'நண்டு கொழுத்தால் வலையில் தங்காது' என்ற சொலவடையும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆளுநருக்கு கண்டனம்
அண்மையில் கோவைக்குச் சென்ற ஆளுநர் அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அரசதிகாரிகளைக் கூட்டி அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இது கடும் கண்டனத்திற்குள்ளானது; அதனால் தனக்குச் சம்பந்தமில்லாத இந்த வேண்டாத வேலையை ஆளுநர் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை.
ஆளுநரின் தவறான செயல்
வீம்புக்காக மறுநாளும் அதே கோவையில் ஆய்வுப் பணி மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். தூய்மைப் பணியைப் பொறுத்தவரையில் அந்தப் பணிக்கு நிரந்தரமாகவே ஆளுநர் தன்னை அர்ப்பணித்துக் கொள்வாரானால் அதை நிச்சயம் பாராட்டலாம். அதற்கு ஆளுநர் பணியை உதற வேண்டும் என்றில்லை; அதில் இருந்துகொண்டே தூய்மைப் பணியையும் தொடரலாம்.
ஆளுநரின் பணி இது அல்ல
ஆனால் இந்த ஆய்வுப் பணி என்பது அவரது பணி இல்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதை கவனிப்பதே ஆளுநரின் பணி. ஆனால் அதைச் செய்யத் தயாரில்லாதவராக இருக்கிறார் தமிழக ஆளுநர். அதைச் செய்யாததோடு தன்னையே அரசாக முன்னிறுத்தவும் தலைப்பட்டிருக்கிறார்.
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை ?
அரசமைப்புச் சட்டப்படி தமிழக அரசுக்கு 118 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மை பலம் கட்டாயம். ஆனால் 111 எம்எல்ஏக்கள்தான் ஆதரவு என்ற நிலையில், கே.பழனிச்சாமி முதல்வராகத் தொடர்வது எப்படி என்பதுதான் கேள்வி. சட்டத்திற்குப் புறம்பாக பழனிச்சாமியின் அமைச்சரவை தொடர அனுமதித்திருக்கும் ஆளுநர், சட்டவிரோத பழனிச்சாமி அமைச்சரவையை ஆஃப் செய்துவிட்டு, அதன் தலைமைப் பொறுப்பை தானே கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
தனியாக உருவாக்கப்பட்ட பணி
இதை உறுதி செய்யும் வண்ணமே, ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் (அடிஷனல் சீஃப் செக்ரெட்டரி) என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக ஆளுநரின் முதன்மைச் செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக்கப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசின் தலையீடு
ராஜகோபால் நடுவண் உள்துறையில் மாநிலங்களுக்கிடையிலான குழுவின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர்; இப்போதைய நடுவண் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர். இவருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலருக்குரிய அந்தஸ்தும் பொறுப்பும் அளிக்கப்படும்; ஓராண்டு அல்லது தேவைக்கேற்ப உயர்த்தப்பட்ட நிலையில் இந்தப் பொறுப்பு இருக்கும் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி அரசியல்வாதிகள்
இந்த நியமனம் அரசியல் சாசனத்திற்கும் அதன் மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் நேர் எதிரானது மட்டுமல்ல; வாக்களித்து இந்த அரசைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதியாகும். அப்படியிருந்தும் பழனிச்சாமி தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பில்லாதது புரிந்துகொள்ளக்கூடியதே. இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருமே பொருளியல் குற்றவாளிகள் என்றால் அவர்களால் அதனை மறுக்க முடியுமா?
மாநில அரசின் மெளனம்
மாநிலத்திற்கு இருந்த ஒன்றிரண்டு உரிமைகள், அதிகாரங்களையும்கூட மோடிசாமிக்குப் படையல் செய்தவர்கள் இவர்கள். உரிமைகள், அதிகாரங்கள் ஏதுமின்றி எந்தப் பணியை, வேலையைச் செய்வது? மக்களைச் சுரண்டுவது மட்டும் தான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி. அதை ஏற்றுக்கொள்வது போலவே இந்த புதிய கூடுதல் தலைமைச் செயலாளர் நியமனத்தில் அரசின் மெளனம் காட்டுகிறது.
மத்திய அரசின் ஏஜெண்ட்
ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பைப் போன்றதுதான்; அதற்காகக் கொட்டியழும் வருவாய் மற்றும் வசதி வாய்ப்புகளோ உங்கவீட்டது எங்கவீட்டதில்லை; தமிழக பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆளுநர் மாளிகைக்காகத்தான். இப்படி இருக்கும்போது "நடுவண் அரசின் ஏஜென்ட்" என்று சொல்வதில் தவறே இல்லை என்பதை ஏன் நிரூபித்துக் காட்டமாட்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
அரசியல் சாசனத்திற்கு விரோதம்
111 எம்எல்ஏக்கள்தான் ஆதரவு என்கிறபோது பெரும்பான்மை இல்லாத பழனிச்சாமி அமைச்சரவை பதவியில் நீடிக்கும் அருகதையையே இழந்திருக்கிறது. ஆனால், அதை அப்புறப்படுத்தச் செய்ய வேண்டியதைச் செய்யாமல் தானே "அரசு" என்பதாக, தனக்கு கூடுதல் தலைமைச் செயலரையே நியமித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். அரசியல் சாசனம் மற்றும் மக்களாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளும் ஆளுநரை தமிழகத்தை விட்டே அப்புறப்படுத்துவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது. இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.