பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க 10 கட்சிகள் முயற்சி
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க 10 கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த, ஆதரவு தெரிவித்த பல கட்சிகளும் தொகுதி ஒதுக்கீடு பஞ்சாயத்தில் இரு அணிகளில் இருந்தும் விலகி இருக்கின்றன.
திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ஆதித்தமிழர் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் இரு கட்சிகளும் திமுக அணியில் இருந்து வெளியேறிவிட்டன. எஸ்.டி.பி.ஐ. தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.

விலகிய கட்சிகள்
அதிமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் மற்றும் கதிரவனின் பார்வார்டு பிளாக் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கட்சிகளுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால் இவை அனைத்தும் அடுத்தடுத்து அதிமுக அணியில் இருந்து வெளியேறின.

சேதுராமன்
பின்னர் மூவேந்தர் முன்னணி கழகத்தின் சேதுராமன் திடீரென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் அறிவிப்பதாக கூறினார். ஆனால் அவர் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை.

தனித்து போட்டி...
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. அதில், தவாகா தனித்து போட்டியிடக் கூடும்; இதர இடங்களில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக அல்லாத கட்சிகள் ஆதரவைக் கோரினால் பரிசீலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்து வெளியேறிய கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டணியாக கை கோர்க்க திட்டமிட்டுள்ளன.

புதிய கூட்டணி?
ஏற்கனவே வேல்முருகன் தலைமையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலேயே புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கட்சிகள் இல்லாமல் குடந்தை அரசின் தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் பல்வேறு தமிழர் இயக்கங்களும் இப்புதிய கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்து வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, திமுக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி நிலவுகிறது. தற்போது 7-வது அணியாக வேல்முருகன் தலைமையில் ஒரு புதிய கூட்டணிக்கான சாத்தியங்களும் உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications