திருப்பூரில் பெண்ணுடன் ரகசிய அறையில் பதுங்கியிருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது- சென்னை கமிஷனர் ஜார்ஜ்
வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர்: பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. கடந்த மே மாதம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் வசூலித்த பணத்தை கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.
இதனையடுத்து மதன் எங்கே என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. மதனின் தாயார் தங்கமும் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் மதனை கைது செய்ய அடுத்தடுத்து போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. இந்த நிலையில் திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர்.
இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மதனினின் 44-வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.