தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன்.. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நெகிழ்ந்த ஸ்டாலின்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை அண்ணாவின் அருகே இருக்க வேண்டும் என்பதுதான், அந்த ஆசை நிறைவேறுவதற்கு பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களின் தார்மீக ஆதரவும் கோபமும்தான் காரணம் என்று கூறி மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருடை உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மதியம் 2.30 மணிக்கு கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது. அப்போதே கருணாநிதியின் இறுதிநேரம் கணிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகனும் திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கனிமொழி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று கருணாநிதியை அரசு மரியாதையுடன் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை எழுத்துப்பூர்வமாகவும் அளித்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி அதை பரிசீலனை செய்வதாகவும் பார்ப்போம் என்று கூறி அனுப்பிவைத்தார்.
இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை திமுக தொண்டர்களை மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்தது.
அந்த அறிக்கையில், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய சட்ட சிக்கல் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளது. அதனால், கருணாநிதியை அடக்கம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அருகே ராஜாஜி மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.
தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்தவர். இந்திய அளவில் முக்கிய அளுமையாக இருந்தவர். 75 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தவர் கருணாநிதி. இப்படிப் பட்டவருக்கு மெரினாவில் அதுவும் அண்ணா நினைவிடத்தில் இடம் இல்லையா என்று பொதுமக்கள், திமுக தொண்டர்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவானது.
இந்நிலையில்தான் திமுக தரப்பில் இருந்து, கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்த டிராஃபிக் ராமசாமி, தி.க. துரைசாமி பாமக பாலு உள்ளிட்ட அனைவரும் கருணாநிதிக்காக வழக்கை வாபஸ் பெற முன்வந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரவு 8 மணிக்கு விசாரணை தொடங்கியது. மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டன. ஆனாலும், தமிழக அரசு இது தொடர்பாக முடிவெடுக்க கால அவகாசம் கேட்டது. இதனால், நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் வழக்கு விசாரணையை இன்று காலை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் கடுமையான வாதங்களுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் இருந்த ஆர்.ராசா இந்த செய்தியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து கட்டியணைத்து மகிச்சி தெரிவித்தார். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் அங்கே திரண்டிருந்த திமுக தொண்டர்களைப் பார்த்து நெகிழ்சியுடன் இருகை கூப்பி தலைவணங்கி நன்றி தெரிவித்தார். அப்போது ஸ்டாலின் மிகவும் நெகிழ்ந்து கண் கலங்கினார்.
இது ஏதோ கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது என்பதற்காக மு.க.ஸ்டாலின் தெரிவித்த சம்பரதாயமான நன்றி மட்டும் அல்ல.
பெரியாரின் பாசறையில் பயின்ற கருணாநிதி அண்ணாவை தலைவராக கொண்டவர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வரானவர். அண்ணாவை உயிர் மூச்சாகக் கொண்டவர். அவர் கொண்டு வந்த பல மக்கள் நல திட்டங்களை அண்ணாவின் பெயரிலே கொண்டு வந்தார். அதனால், கருணாநிதியின் விருப்பம் அண்ணாவின் அருகிலே இருப்பதுதான்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்களை தன் பெயரில் அறிவித்து தன்னை வரலாற்றில் முன்னிலைப் படுத்திக்கொண்டார் என்றால், கருணாநிதி அண்ணாவின் பெயரில் அறிவித்து அதன் மூலமாக தன்னை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்துகொண்டவர். இப்படியான தலைவர் கருணாநிதியின் ஆசை அண்ணாவுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். இந்த ஆசையை ஒரு மகனாக மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டியது அவரது கடமையல்லாவா?
ஆனால், தமிழக அரசு கருணாநிதியின் ஆசையை சிதைக்கும் படி நடந்துகொண்டது. இதனால், மு.க.ஸ்டாலின் உடைந்துதான் போயிருந்தார். உயர் நீதிமன்றம் கருணாநிதியை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது. அதற்கு காரணம் வழக்கறிஞர்களின் வாதம் மட்டும் காரணமல்ல திமுக தொண்டர்களின், பொதுமக்களின் அறச்சீற்றமும் ஒரு காரணம். நீதிமன்றத்துக்கு வெளியே கொந்தளித்த பொதுமக்களின் தார்மீக கோபமும் ஒரு காரணம். அதற்காகத்தான் மு.க.ஸ்டாலின் ராஜாஜி ஹாலில் பொதுமக்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார்.
உண்மையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய தனயன் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையல்ல.












Click it and Unblock the Notifications