சூடுபிடிக்கும் “ஏழைகளின் ஏசி” வெட்டிவேர் தட்டி விற்பனை!
சென்னை: கோடை நெருங்கி விட்டதால் வெட்டி வேர் திரைகள் சென்னையில் அமோகமாக விற்பனையாகி வருகின்றது.
சென்னையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் தலை காட்டினால் தலை காய்ந்து போய் விடும் போல. அப்படி ஒரு வெயில்.
இந்த நிலையில் வெயில் காலப் பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஏசி, ஏர் கூலர் விற்பனை அதிகரித்துள்ளது.

வெட்டிவேர் தட்டிகள்:
ஆனால் ஏ.சி, ஏர் கூலர் இவை எல்லாம் புழக்கத்திற்கு வரும்முன், நம் முன்னோர்கள் இயற்கையாகவே குளிரூட்டும் வசதிகளை வீடுகளில் செய்திருந்தார்கள்.

குளுமையான கட்டிடங்கள்:
பழங்கால கட்டிடங்களின் தரைகள் மற்றும் கூரைகளில் பதனீர், கடுக்காய் பால், சுண்ணாம்பு கலந்த ஒருவகை கலவை பயன்படுத்தப்பட்டன. இவை வீட்டின் தட்பவெப்பத்தை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும்.

இதமாகும் வீட்டு சூழல்:
இதேபோன்று, கதவு, ஜன்னல்களில் மூங்கில் மற்றும் வெட்டி வேர்களால் வடிவமைக்கப்பட்ட திரைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னம் ஓலைகளையும் மாடிகளில் போட்டு வைப்பார்கள்.

தண்ணீர் தெளித்தால்
இந்த திரைகளில் தண்ணீர் தெளித்துவிட்டால் போதும், வெயில் தாக்கத்தின் காரணமாக வீசும் அனல் காற்றை இதமாக்கி, வீட்டிற்குள் சிலு, சிலு என்ற குளிர்ச்சியான காற்றுடன் ரம்மியமான நறுமணம் வீசும்.

உடலுக்கு கெடுதல் இல்லை:
இத்தகைய வெட்டி வேர், மூலிகைத் திரைகள் தற்போது ஏழைகளின் ஏ.சி.யாக மாறி உள்ளன. இவை இயற்கையானவை என்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதில்லை. உடலையும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது.

ஏழை மக்களுக்காக:
தற்போது நாகரீக வளர்ச்சி காரணமாக இதுபோன்ற பொருட்களின் மவுசுகள் மங்கியிருந்தாலும், கோடையை சமாளிக்க ஏழை, நடுத்தர மக்கள் இதனை நாடுகிறார்கள். இது தற்போது மக்கள் மத்தியில் கிராக்கியாக மாறியுள்ளது.

சென்னையில் கிடைக்குது:
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மூங்கில் மற்றும் வெட்டி வேர்களால் ஆன கதவு, ஜன்னல் திரைகளை சென்னை வால்டாக்ஸ் சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். அங்கு ஏராளமானவர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர்.

தென்னை இலை விசிறி:
அதேபோல கிராமப்புறங்களில் அதிகம் புழக்கத்தில் உள்ள தென்னை இலை விசிறி, பனை ஓலை விசிறி ஆகியவையும் நகரங்களில் அதிகம் காணப்பட ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications