பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு: விஸ்வஹிந்து பரிஷத்
சென்னை: பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு நிறுவன தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி ஓசூரில் ‘நாளை நமதே' என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில் சங்கராச்சாரியார் உள்பட முக்கிய பிரமுகர்கள், சைவ, வைணவ ஆச்சாரியார்கள், இளைஞர்கள் என ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படும்.
தற்போது முற்போக்கு சிந்தனை எனக்கூறிக்கொண்டு முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளனர். பொது இடத்தில் பல பேர் பார்க்கும் வகையில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர். இது நமது நாட்டின் கலாசாரத்தை சீரழிக்கும்.

கலாச்சார சீர்கேடு
நமது நாடு பண்பாடு, கலாசாரத்தில் சிறந்தது. பெண்களுக்கு தனி மரியாதையும், முக்கியத்துவமும் உள்ளது. இன்றைய காலத்தில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கதல்ல என்றார்.
நடவடிக்கை தேவை
சென்னை ஐ.ஐ.டி.யிலும் இந்த போராட்டம் நடந்துள்ளது. அரசு இதில் தனி கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் முத்தம் கொடுக்கும் போராட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தை கண்டித்து விசுவ இந்து பரிஷத் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அன்பின் வெளிப்பாடா?
முத்த போராட்டத்தை அன்பின் வெளிப்பாடு எனவும் கருத்து கூறி உள்ளனர். இது தவறானது. அன்பின் வெளிப்பாடு என்பது கைக்கொடுக்கலாம், இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவிக்கலாம், பூச்செண்டு கொடுக்கலாம். ஆனால் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது என்பது அன்பின் வெளிப்பாடு இல்லை. அது இனக்கவர்ச்சியே ஆகும்.
மேலைநாட்டு மோகம்
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது தவறானதல்ல. ஆனால் சகோதர, சகோதரிகளோ, இளைஞர், இளம்பெண்களோ பொது இடத்தில் முத்தம் கொடுப்பது தவறானது. இந்த போராட்டம் பிற்போக்கு சிந்தனை தான். மேலை நாடுகளின் மோகம் அதிகரித்து வருவது தான் இதற்கு காரணம். தனி மனித உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. பொதுவான இடத்தில் தனி மனித உரிமையை அநாகரிகமாக செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications