ஜல்லிக்கட்டு குறித்து நான் சொன்னது என்ன.. வீடியோவைப் போய்ப் பாருங்கள்.. விஷால்
சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து நான் கூறாததை கூறியதாக சொல்லி போராட்டம் நடத்துகின்றனர். முதலில் அந்த வீடியோவைப் பாருங்கள். அதில் நான் என்ன பேசியுள்ளேன் என்பது தெளிவாக உள்ளது. தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து நடிகர் விஷால் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். மதுரை காளைஸ் என்று கிரிக்கெட் அணிக்கு மட்டும் பெயர் வைத்துக் கொண்டு, காளைகளுக்கு எதிராக விஷால் செயல்படுவது நியாயமா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
விஷால் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டின் முன்பு கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் விஷால் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் தருவதே வருத்தமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
முதலில் நான் பேசியது தொடர்பான வீடியோவை முழுமையாக பாருங்கள்... யார் வேண்டும் என்றாலும் பார்க்கலாம்... விளக்கம் தெரிவிப்பதே மிகவும் வருத்தம் அளிக்கிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, இந்நிலையில் கருத்து தெரிவிப்பது தவறானது. போராட்டம் நடத்துவது அவர்களுடைய விருப்பம்... முன்னதாக வீடியோவை பார்க்கவேண்டும்...அதில் எல்லாமே உள்ளது. நான் சொன்னது ஒன்று, நடப்பது ஒன்றாக உள்ளது... சித்தரிக்கப்பட்டு உள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள், முழுமையாக பார்க்காமல் போராட்டம் நடத்துகின்றனர் என்றார் விஷால்.