ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை... விஜயகாந்த்
சென்னை: ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை. கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகி விட்டது. எங்களது அடுத்த கட்டப் போராட்டம் குறித்து போகப் போகத் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மது விலக்கை அமல்படுத்தக் கோரி நேற்று தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர். மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால், விஜயகாந்த் உள்பட ஆயிரக்கணக்கான தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து விட்டு இரவோடு இரவாக விடுதலை செய்து விட்டனர்.
விடுதலையான பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது எங்களது போராட்டம் வெற்றியா தோல்வியா என நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைக் கேட்டால் நான் வெற்றி என்றுதான் சொல்லுவேன். வியூகம் அமைப்பவர்கள் எதையும் முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். தேமுதிகவின் அடுத்தக் கட்ட போராட்டம் போக போக தெரியும்.
ஜெயலலிதாவுக்கு கெட்ட நேரம் வந்துடுச்சு. ஜெயலலிதாவுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. கட்சிகள் வெவ்வேறு. ஆனால் நோக்கங்களும், எண்ணங்களும் ஒன்றுதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் விஜயகாந்த்.
முன்னதாக திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வந்து சந்தித்தனர்.