தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிக்காக போட்டியிடவில்லை…: உண்மையை சொன்ன நல்லகண்ணு
தூத்துக்குடி: தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிக்காக போட்டியிடவில்லை, கொள்கைக்காக களம் இறங்கியுள்ளது. என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன்ராஜுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய குழு தலைவர் நல்லக்கண்ணு தூத்துக்குடியில் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரையில்லாத திருப்புமுனையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய பொருளாதாரத்தை அந்நிய முதலாளிகளுக்கு அடகு வைத்த காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜவையும் எதிர்த்து இடதுசாரிகள் இணைந்து களம் இறங்கியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்திய அளவில் 14 கட்சிகள் இணைந்து 3வது அணி உருவானது. இதில் அதிமுகவும் பங்கேற்றது. மேலும், தேர்தலின் போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடம் ஒதுக்குவதாகவும் அதிமுக அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜக வுடன் தொடர்புள்ள கட்சிகளுக்கும், அதிமுகவுக்கும் இடது சாரிகள் ஆதரவு அளிக்காது. திமுகவுக்கும் எங்கள் ஆதரவு கிடையாது. தமிழகத்தில் 5 முனை போட்டி என்பது தேவையற்றது.
தமிழகத்தில் இடது சாரிகள் போட்டியிடும் 18 இடங்களை தவிர்த்து, பிற இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் இணைந்து போராடும். அந்த வகையில் தற்போது வெற்றிக்காக நாங்கள் போட்டியிடவில்லை. கொள்கைக்காக போட்டியிடுகிறோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.












Click it and Unblock the Notifications