தண்ணீர் குழாய்க்கு பூட்டுப்போடும் மக்கள்.. தவிக்கும் தன்னூத்து கிராமங்கள்.. ரியல் ராமநாதபுரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கடலாடி பகுதியில் தண்ணீர் குழாய்க்கு மக்கள் பூட்டுபோடும் சம்பவங்கள் நடக்கிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், தண்ணீருக்காக அந்த பகுதி மக்கள் படும் பாட்டினை சிறுவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
கத்தி படத்தில் வருவது போல், சென்னையில் பிரச்சனை என்றால் மட்டுமே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தண்ணீர் பிரச்சனை, விபத்து என எதுவாக இருந்தாலும் காட்டுகிறார்கள் என்பது பொதுவாக குற்றச்சாட்டு. மற்ற ஊர்களின் பிரச்சனையை அந்த அளவிற்கு காட்டுவது இல்லை என்றும் கூறுவார்கள்.

விஜய் நடித்த கத்தி படத்தில் வருவது போன்று பல தன்னூத்து கிராமங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன. வைகை நதி ஒன்று தான் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ள ஒரே ஜீவநதி.. குடிநீர், பாசனத்திற்கான ஆதாரமும் அதுதான். தேனியில் வைகை ஆற்றில் வெள்ளம் போனாலும், ராமநாதபுரத்தை தொடும்போது முட்டி அளவிற்கு கூட தண்ணீர் போய் சேராது..
மதுரை பகுதியில் இப்படி சொல்வார்கள்.. கடலில் கலக்காத ஒரே நதி வைகை நதி என்று.. உண்மையில் எந்த நதியும் கடலில் கண்டிப்பாக கலக்கும். அந்த வகையில் வைகையும் கடலில் கலக்கும்.. ஆனால் என்ன பிரச்னை என்றால், தேனியில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கடந்து ராமநாதபுரம் போகும் போது, அந்த மாவட்டத்தை தாண்டவே முடியாது என்கிற அளவிற்கு வறட்சி நிலவும். அந்த மண்ணில் தண்ணீர் தாண்டினால் தானே கடலுக்கு போகும். அதனால் பெரும்பாலான ஆண்டுகள் கடலில் கலப்பதற்கு கூட சாத்தியப்படாது.
இந்த சூழலில் முல்லை பெரியாறு தண்ணீரும் வராமல் போனால் தேனி முதல் ராமநாதபுரம் வரை பாலைவனம் ஆகிவிடும். இது தான் அங்கு எதார்த்தம். ராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லாத காடு என்று ஒரு காலத்தில் சொல்வார்கள்.இன்றும் அந்த பெயர் அப்படியே தான் இருக்கிறது.
தண்ணீருக்காக அந்த பகுதி மக்கள் அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் வாராது என்றால் அது தலைப்பு செய்தி. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் வருமாம். அந்த வகையில் அங்கு தண்ணீர் வந்தாலே தலைப்பு செய்தி என்கிற நிலை தான் இருக்கிறதாம்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் எஸ்எம் இலந்தைகுளம் என்ற கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் குழாய்க்கு பூட்டு போட்டிருக்கிறார்கள் மக்கள்..ஒரு குடும்பத்திற்கு 5 நாட்களுக்கு 2 குடங்களே(சில சமயம் பல நாட்கள் ஆகுமாம்) கிடைக்கும் என்கிறார்கள்.
தண்ணீர் வந்தால் பலரும் அதிக குடம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதால் பூட்டு போட்டு முறைப்படி தண்ணீர் விடுகிறார்கள் அந்த பகுதி மக்கள். தண்ணீர் எப்போதுவரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தண்ணீர் வந்தாலே மக்கள் கொண்டாடுவார்கள். தன்னூத்து போல் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் பிரச்சனை தீர நிரந்தர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
https://x.com/being_nimal/status/1711352294820983131?s=20











Click it and Unblock the Notifications