சத்தமின்றி தூத்துக்குடி வந்த விஜய்.. பலியானோர் வீட்டுக்கு பைக்கில் போய் துக்கம் விசாரித்தார்!
Recommended Video

தூத்துக்குடி: நடிகர் விஜய் சத்தமே போடாமல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு நள்ளிரவில் சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மதுரை வந்த விஜய் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்குப் போயுள்ளார். டோல்கேட் வரை காரில் பயணித்த அவர் அதன் பின்னர் ஒரு பைக்கில் ஏறி பயணித்தார்.
யாரும் அடையாளம் கண்டு விடாதபடி முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி அவர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானோரின் வீடுகளுக்குப் போனார்.
நள்ளிரவில் விஜயம்
கிட்டத்தட்ட நள்ளிரவில் வந்த விஜய்யைப் பார்த்து குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். எதிர்பாராத வேளையில் விஜய்யைப் பார்த்து அவர்களுக்கு சோகம் கூடி கதறி அழுதனர்.

ஸ்னோலின் வீட்டுக்கு
வாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு கோரமாக கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின், ஜான்சி, கிளாட்சன் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு போனார் விஜய். குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிப் பேசினார் விஜய்.

தரையில் அமர்ந்து பேசினார்
விஜய்யைப் பார்த்த குடும்பத்தினர் அழுதபடி நடந்ததை விவரித்தனர். அமைதியாக அவர்களுடன் அமர்ந்து அதைக் கேட்ட விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சேரில் உட்காருமாறு கூறியும் விஜய் மறுத்து விட்டார்.

ரூ. 1 லட்சம் நிவாரணம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்கினார். அதற்கான காசோலையை குடும்பத்தினரிடம் கொடுத்தபோது அவர்கள் அழுதபடி அதைப் பெற்றுக் கொண்டனர்.

காயமடைந்தோரையும் சந்திக்க திட்டம்
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோரைப் பார்க்கிறார் விஜய் என்று தகவல்கள் கூறியுள்ளன. இருப்பினும் அவரது பயண விவரம் குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications