“ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சிட்டா போச்சி”.. அதிர வைத்த விஜய் ரசிகர்கள்! பரபர போஸ்டர்!
செங்கல்பட்டு: நடிகர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் வகையில், செங்கல்பட்டு பகுதியில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்திருந்த நேரத்தில் திடீரென ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் சொல்லும் குட்டிக்கதை, அரசியல் பஞ்ச்கள் பரபரப்பைக் கிளப்பும். இப்போது ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 6000 பேர் வரை பங்கேற்கலாம். ஆனால் லியோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் குவியத் தொடங்கியுள்ளது. அப்படி கூடுதல் டிக்கெட்டுகளை வழங்கினால் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் போன்று பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியதால் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்கிற ரீதியில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஆடியோ ரத்து அறிவிப்பில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. ஆனாலும், விஜய் ரசிகர்கள், ஆளும் கட்சியை சீண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
அந்த போஸ்டரில் விஜய் படத்துடன் "ஆடியோ லான்ச் இல்லைனா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி.. என்ன நண்பா?" என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் படமும் இடம்பெற்றுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் இந்த போஸ்டர்களை செங்கல்பட்டு நகர் முழுக்க ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், "இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது.. அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்ற வாசகங்களுடனும் செங்கல்பட்டு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் திமுக, அதிமுக, வேட்பாளர்களுக்கே டஃப் கொடுத்தனர். நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது படத்தையும் கொடியையும் மட்டுமே பயன்படுத்தி இந்த வெற்றியை அவர்கள் சாத்தியப்படுத்தினர்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் பல மாதங்களாகவே வட்டமடிக்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு என விஜய்யின் நகர்வுகளும் அதை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications