செங்கோட்டையன் வசம் நிதித்துறை.. பின்னணியில் உள்ள காரணம் என்ன? பத்திரிகையாளர் சுவாமிநாதன் கருத்து!
சென்னை: தமிழக முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர். ஆனால் 6 நாட்களாக அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முதல்வரின் தனிச் செயலாளர் செந்தில் குமார், ஆளுநர் அர்லேகரை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் யார் யாருக்கு என்ன இலாகா என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. முதல்வர் விஜய் வசம் காவல், பொது நிர்வாகத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், மகளிர் நலன்,. இளைஞர் நலன், குழந்தைகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்டவை இருக்கிறது.

நிதித்துறை அமைச்சராக செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சராக சிடிஆர் நிர்மல் குமார், சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா, இயற்கை வளத்துறை அமைச்சராக பிரபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் ஆகியோருக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், அனுபவம் மிகுந்த செங்கோட்டையனுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது. அது ஆரோக்கியமான விஷயம். மற்ற அனைவருமே புதியவர்கள் தான். சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும் புதியவர்கள் தான். தமிழ் வளர்ச்சித்துறை ராஜ்மோகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் அவர் ஒரு பேச்சாளர்.
அவர் அரசியலுக்கு புதியவர். அந்த அடிப்படையில் தமிழ் வளர்ச்சித்துறை அவருக்கு பொறுத்தமானது. அந்த துறை சார்பாக 6 வகையான போட்டிகள் நடக்கும். அது இனி நடக்குமா என்பதை தீர்மானிப்பார்கள். பள்ளிக் கல்வித்துறையும் அவர் வசம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வியில் என்ன மாதிரியான விஷயங்கள் செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
இலாகா ஒதுக்கீட்டுக்கு இவ்வளவு தாமதமும் கவனம் பெற்றது.கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோப்புகள் மேஜையில் காத்து கொண்டிருக்கிறது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம். அமைச்சரகள் பொறுப்பேற்கும் போதுதான் துறை சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதேபோல் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விஜய் வசம் இருக்கிறது.
போதைப்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்டவை மகளிர் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், செயல்பட வேண்டும். தவெக எம்எல்ஏ-க்களே அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்களில் ஆய்வுப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் எப்படி செயல்பாடுகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications