''நீ ஒரு போராளி''... சோனியா பாராட்டியதால் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கும் விஜயதாரணி
சென்னை: "நீ ஒரு போராளி" என்று டெல்லியில் சோனியா காந்தி பாராட்டியதால் குதூகலம் அடைந்துள்ளாராம் விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணிக்கும் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ஏற்பட்ட கலகம் போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

டெல்லி தலைமையின் எச்சரிக்கையை அடுத்து வழக்கை வாபஸ் பெற்றாலும் கட்சி பதவியில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி எம்.எல்.ஏ. விஜயதாரணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 23ம் தேதி சட்டசபை கூடியபோது, முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்து மனு கொடுத்தார் ஜெயலலிதா. இதனையடுத்து அவர் அதிமுகவிற்கு செல்ல இருப்பதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக கடந்த 3ம் தேதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது அவர், நான் காங்கிரசில் இருந்து விலக மாட்டேன். கட்சி தலைமையின் ஆதரவு எனக்கு இருக்கிறது'' என பேட்டியளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேற்று விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் சோனியாவிடம் விளக்கியதாக தெரிகிறது. மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விரும்பும் விஜயதாரணி, தனது தொகுதியான விளவங்கோட்டில் தான் செய்த பணிகள் குறித்த புகைப்படத்தையும் விஜயதாரணி காண்பித்தாராம்.
இதையடுத்து சோனியா, ''நீ ஒரு போராளி. நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். ராகுல்காந்தியுடன் பேசி நல்ல முடிவு எடுக்கிறேன். அதுவரை தொகுதி பணியை கவனி'' என்று கூறினாராம். சோனியா காந்தி பாராட்டியதால் மகிழ்ச்சி அடைந்த விஜயதாரணி, நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications