தம்பதி சமேதராக ஸ்ரீரங்கத்திற்குப் போகிறார் விஜயகாந்த்.. பிரசாரம் செய்ய!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவோடு பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
66வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பா.ஜ.க மீது காழ்ப்புணர்ச்சியுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
குறிப்பாக மொழிப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஏனென்றால் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது பாரதீய ஜனதா கட்சித்தான்.
பாரதியார் பிறந்த நாள், திருவள்ளுவர் தினம் ஆகியவற்றை நாங்கள் சிறப்பாக கொண்டாடி இருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்களது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரிடமும் பேசி இருக்கிறோம்.
பா.ம.க. சார்பில் அவர்களின் நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஊழலற்ற ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை முன்நிறுத்தி ஸ்ரீரங்கத்தில் பா.ஜனதா கூட்டணி பிரசாரம் மேற்கொள்ளும்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் பா.ஜ.கவில் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். எங்களது இலக்கை வேகமாக சென்று அடைவோம்.
எந்த நாடு (அமெரிக்கா) மோடிக்கு விசா வழங்க மறுத்ததோ அந்த நாட்டின் அதிபரே நமது குடியரசு விழாவில் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் அதிபரான ஒபாமா டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்றிருப்பது நமது பெருமையை உயர்த்தி காட்டியிருக்கிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.