ஜெ.வுடன் சிங்கம் போல மோதிய விஜயகாந்த்.. மறக்க முடியுமா??
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடும் நேரத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து அவர் செய்த அரசியல் அனைவர் மனதிலும் நிழலாடுகிறது.
தேமுதிக பொதுச் செயலாளர் இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
திரைத்துறையில் ஈட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்த விஜயகாந்த், போலீஸ் அதிகாரி கதைகளுக்கு தனது மிடுக்கான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
தேமுதிக கட்சி
அவரை பார்த்து போலீஸ் வேலைக்கு வந்தவர்கள் ஏராளம். இந்நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தார். அதன்படி கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.
29 தொகுதிகளில் வெற்றி
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். இதில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
காரசாரமான விவாதம்
திமுகவை 3-ஆம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து சட்டமன்றத்தில் விஜயகாந்துக்கு கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
நாக்கை துருத்திய விஜயகாந்த்
சட்டசபையில் அதிமுகவுடன் கூட்டணியில்லாமல் போட்டியிட திராணி உள்ளதாக என்று அமைச்சர் ஒருவர் விஜயகாந்தை பார்த்து கேட்க சட்டசபையிலேயே நாக்கை துருத்தி கண்டித்தார். பெரும்பாலான விஷயங்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டம் என்றால் அதை எதிர்த்தார்.
உடல்நலம் பாதிப்பு
ஜெயலலிதாவையே எதிர்க்க துணிந்த திராணி உள்ளவர் விஜயகாந்த் என்று பெயரெடுத்த விஜயகாந்துக்கு சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் போய் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு 66-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் எல்லா வளமும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பழைய கேப்டனாக மீண்டு(ம்) வந்து மிரட்டுவார் என்று வாழ்த்துவோமாக! ஹேப்பி பர்த்டே கேப்டன்.