முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு.. வைகோ பேட்டியால் பரபரப்பு
சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி சேராமல் எங்கள் கூட்டணிக்கு வந்ததால் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: திமுக உடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததாகவும், மக்கள் நலக்கூட்டணி தனது கொள்கை முடிவில் இருந்து மாறியது தவறானது என்றும் மதிமுக பொதுச்செயலாளரும், மநகூ ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக இணைந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தன. தேர்தல் நெருங்க நெருங்க, திமுக, அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் இருந்த மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாக திரும்பினர். இந்த 4 கட்சிகள் இணைந்த கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அப்போதே அது பல விமர்சனங்களை சந்தித்தது. தொகுதி பங்கீடு முடிந்த பின்னர், ஜிகே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்தது.
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர்தான் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது வெட்ட வெளிச்சமானது. அதிமுக, திமுக தவிர வேறு எந்த கட்சியையும் மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை என்பது தெரியவந்தது.

முதல்வர் வேட்பாளர்
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இணையதளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன. விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி பேசிய போதும், அவர் ஒரு முதல்வர் வேட்பாளருக்கு ஒரு தகுதியுடன் நடந்து கொள்ளவில்லை. அவருடைய பிரச்சார பேச்சுக்கள் கேட்ட மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அப்போதே அவரிடம் அது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். இப்படி எல்லாம் கோபப்படுபவர்களை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

வைகோவின் தவறு
அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவும், கோவில்பட்டி தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவித்து அதே வேகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய போகும் போது சப்பை காரணத்தை கூறி போட்டியிடுவதிலிருந்தும் பின்வாங்கினார். இவற்றுக்கெல்லாம் பிறகும் மக்களுக்கு எப்படி அந்த அணி மீது நம்பிக்கை வரும். எனவேதான் விஜயகாந்த் உள்ளிட்ட எல்லோரையும் டெபாசிட் போக வைத்தனர் வாக்காளர்கள். தப்பியது திருமாவளவன் டெபாசிட்தான். அவர் தோற்றது சொற்ப வாக்குகளில்தான். அதுவும், விதி செய்த சதியா என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.

மனம் திறந்த வைகோ
இதனிடையே ஆங்கில இதழ் ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்தை முதல்வராக அறிவித்தது ஏன் என்று மனம் திறந்துள்ளார் வைகோ.
தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள் நலக்கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் தி.மு.க.விடம் கூட்டணி அமைக்காமல் எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்துக்கு நன்றி
மக்கள் நலக்கூட்டணி தனது முடிவில் இருந்து மாறியது தவறானதுதான். ஆனால் எந்த சூழ்நிலையில் விஜயகாந்தை நாங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்பதை நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்ததற்காக நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருந்தோம்.

நன்றிக்கடன்
தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளை கொடுக்க தி.மு.க. தயாராக இருந்தது. என்றாலும் அவர் தி.மு.க.விடம் சேராமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தார். அந்த ஒரு காரணத்துக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக நாங்கள் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.

மதிமுகவை அழிக்க நினைப்பதா?
தி.மு.க.வுக்காக நான் 29 ஆண்டுகள் உழைத்தேன். ஆனால் என் மீது பழி சுமத்தி சதி குற்றச்சாட்டு கூறி கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள்.
ஆனால் ஆதரவாளர்கள் எனக்கு துணை நின்றனர். நாங்கள் மதிமுகவை தொடங்கினோம். ஆனால் இன்றும் மதிமுகவை அழிக்க வேண்டும் என்ற ஒரே திட்டத்துடன் திமுக செயல்படுகிறது.

2006ல் அதிமுக உடன் கூட்டணி
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது ம.தி.மு.க.வில் இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க கூடாது என்றனர். அவர்களுக்கு கட்டுப்பட்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அவர்கள் மூவரும் பிறகு திமுகவுக்கு போய் விட்டனர்.

ஜெயலலிதா உடன் நட்பு
நான் அதிமுக ஆதரவாளர் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. 2011ல் நாங்கள் ஜெயலலிதா வீட்டுக் கதவை தட்டவில்லை. தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்தோம். உடனே அவர் என் முடிவை மதிப்பதாக கடிதம் எழுதினார். அதுபோல் நான் பாதயாத்திரை சென்றபோது வழியில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த நட்பை நான் அரசியலுக்கு பயன்படுத்தவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.

காலங்கடந்து வருத்தப்படும் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவார்கள். சட்டசபை தேர்தலின் போதும் சரி, லோக்சபா தேர்தலின் போதும் சரி அவர் எடுக்கும் முடிவுகள் தவறாகவே அமைந்துள்ளது. மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ, விஜயகாந்த் தனது கூட்டணியில் இணைந்து விட்டார் என்பதற்காக கேப்டன் கூட்டணி என்று கூறினார். இப்போது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு என்று காலங்கடந்து வருத்தப்படுகிறார்.












Click it and Unblock the Notifications