தேமுதிக. தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் விழா ரத்து- மற்ற இடங்களில் ஆடம்பரம்பற்ற கொண்டாட்டம்: விஜயகாந்த்
சென்னை: மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் தே.மு.தி.க. தலைமை நிலையத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் மற்ற மாவட்டங்களில் ஆடம்பரமில்லாமல் வழக்கம் போல கேக்குகள், இனிப்புகள் வழங்கலாம் என்றும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பகைவர் இடத்திலும் அன்பு செலுத்தி, நம்மை வெறுப்பவர்களுக்கு உதவி செய்து, புறம்பேசுவோரை வாழ்த்திடவேண்டுமென போதித்து, தன் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர் இயேசு பிரான் ஆவார். அவருடைய மார்க்கத்தை கடைபிடிக்கும் கிறிஸ்துவ மக்கள், அவர் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
சாதி, மதம் என்ற பேதம் இல்லாத நிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தேமுதிக தலைமை கழகத்திலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.
தற்போது சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவும் விதமாக, நம்மாலான உதவியாக சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள், போர்வை, வேஷ்டி, சேலை, பாய், குடிநீர் பாட்டில், மருந்துகள் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசியப் பொருட்கள், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் வெகு விமரிசையாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை தேமுதிக சார்பில் கொண்டாடுவது சரியாக இருக்காது என்பதை மனதில் கொண்டு, தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா ரத்து செய்யப்படுகிறது.
அதே சமயத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆடம்பரம் ஏதுமின்றி, ஏழை, எளியவர்களுக்கு உடைகள், பிரியாணி உணவு, கேக்குகள், இனிப்பு வகைகள் போன்ற வைகளை வழக்கம்போல் வழங்கிடவேண்டுமென தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர் களையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சுமார் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கிய தேமுதிகவின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications