புது உத்வேகத்தில் கேப்டன் - உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து விரைவில் கட்சியினருடன் ஆலோசனை
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வில் இருந்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடு குறித்தும் கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிகவினர் துவண்டு போயுள்ளனர். கட்சியால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது தேமுதிகவினரை சோர்வடைய வைத்துள்ளது.
விஜயகாந்த்துக்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து திரும்பியது முதல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
சட்டசபைக்கு வரவில்லை:
சிகிச்சை முடிந்து திரும்பியது முதல் எந்த நிகழ்ச்சியிலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. சட்டசபைக்கும் அவர் போகவில்லை.
ஒரே ஒருமுறை சந்திப்பு:
கட்சி எம்.எல்.ஏக்களை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்துப் பேசினார். அவர்களுடன் சட்டசபை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
சுதந்திர தினம் முதல்:
இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடா வருடம் நடக்கும் விழா இது. இதில் இந்த முறை விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அவர் தற்போது பங்கேற்கவுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் அன்று முதல் புத்துணர்ச்சியுடன் அவர் செயல்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தீவிர ஆலோசனை:
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வியூகத்தை வகுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபடவுள்ளார்.
அதிமுகவிடமிருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா?:
தேமுதிகவை உடைத்து அதிலிருந்து மேலும் சில எம்.எல்.ஏக்களை அதிமுக பக்கம் இழுக்கவும் அதிமுக தரப்பிலும், அதிருப்தி தேமுதிக தரப்பிலும் சிலர் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இதையும் முறியடிக்க வேண்டிய நிலையில் விஜயகாந்த் உள்ளார்.