ஆந்திர சிறையிலிருந்து தமிழர்கள் விடுதலை.. திமுகவை பெயர் சொல்லாமல் கண்டித்த விஜயகாந்த்!
சென்னை: வனக்காவலர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர சிறையில் வாடிய தமிழர்கள் 287 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக திமுகவுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டிப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் திமுக என்ற பெயரை நேரடியாக கூறாமல் கண்டித்துள்ளார்.
ஆந்திர வனக்காவலர்கள் 2 பேர் 2013ம் ஆண்டு டிசம்பரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 287 தமிழர்கள் உள்ளிட்ட கைதிகள் நிரபராதிகள் என கூறி திருப்பதி நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கிற்கு தமிழக அரசு உதவியதாக அதிமுகவும், திமுகதான் வக்கீல்களை ஏற்பாடு செய்தது என்று அந்த கட்சியும், தமிழர் விடுதலைக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

ஆதாயம் தேடுகிறார்கள்
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், "அரசியல் ரீதியாக இதில் ஆதாயம் தேடும் வகையில் பல கட்சிகள் தங்களுடைய வழக்கறிஞர்களின் முயற்சியால்தான் விடுவிக்கப்பட்டனர் என உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய யாரும் முன்வருவதில்லை" என சாடியுள்ளார்.

பெயர் இல்லை
இந்த கண்டனம் திமுகவுக்கானதுதான் என்றபோதிலும், தனது அறிக்கையில் திமுக பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதேநேரம், அதிமுக தலைமையின் பெயரை பயன்படுத்தி கண்டித்துள்ளார் விஜயகாந்த்.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு
"ஊடகங்கள் சில, தமிழர்களை விடுதலை செய்தது தமிழக அரசு என்பது போலவும், முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே முயற்சி எடுத்தது போலவும், அதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லுங்கள் என்றும் வற்புறுத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுப்போல் உள்ளது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

திமுகவில் சலசலப்பு
திமுகவோடு, தேமுதிக கூட்டணி அமைக்குமா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது. இந்த நிலையில் திமுகவையும், விஜயகாந்த் கண்டித்துள்ளது திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், திமுக பெயரை பயன்படுத்தாதது, அக்கட்சியினருக்கு, கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications