'தில்' ஆ இருங்க... பலமா கூட்டணி அமைக்கிறோம்... ஜெயிக்கிறோம்... சொல்வது விஜயகாந்த்
சென்னை: "தேர்தல்ல ஜெயிப்போமா மாட்டோமான்னு உங்க மனசுக்குள்ள மரண பீதி இருக்கிறது நல்லா தெரியுது.. அதே பீதி எனக்கும் இருக்கத்தான் செய்யுது... கவலைப்படாதீங்க... நாமா பலமா கூட்டணி அமைக்கிறோம் ஜெயிக்கிறோம்" என்று தனது கட்சியில் சீட் கேட்டு லட்சக்கணக்கில் டெபாசிட் கட்டியவர்களிடம் வடிவேலு பாணியில் சமாதானம் செய்து வருகிறார் விஜயகாந்த்.
திமுக உடன் கூட்டணி சேர்ந்தால் சில சீட்டுகளை ஜெயித்து எம்.எல்.ஏ ஆவோம் என்று கனவில் இருந்தனர் தேமுதிகவினர். ஆனால் அதற்கு நேர் எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து ஏராளமான தொண்டர்களின் கனவுகளை கலைத்து விட்டார் விஜயகாந்த்.
விஜயகாந்த் அறிவிப்பினால் மனமொடிந்து போன தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகதாகவும், சீட் கேட்டு, கட்சித் தலைமையிடம் கட்டிய டெபாசிட் பணத்தை நிர்வாகிகள் சிலர் திருப்பிக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்சி மாறும் தேமுதிக நிர்வாகிகள்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 300 பேர், கடந்த வாரம் பாமகவில் இணைந்தனர். ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக மூத்த நிர்வாகியான தொழிலதிபர் சிங்கம் பஷீர், திமுகவில் இணைந்துள்ளார். இதேபோல, நிர்வாகிகள் சிலர் திமுக, அதிமுகவுக்கு செல்லப்போவதாக தலைமைக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

விஜயகாந்த் சமாதானம்
தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்புவரை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தினமும் வந்த வண்ணம் இருந்தனர். தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு தொண்டர்களின் வரத்து குறைந்தது. மாவட்டச் செயலாளர்கள் பலரும் கட்சியின் முடிவால் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகவே அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜயகாந்த் இறங்கியுள்ளாராம்.

அதிருப்தி நிர்வாகிகள்
அதிருப்தியில் இருப்பவர்களை தேமுதிக தலைமை அலுவலக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ‘யாரும் அவசரப்பட வேண்டாம். கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்' என்று கூறி வருகின்றனர்.

பலமான கூட்டணி
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ம.ந. கூட்டணி, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தலைமை அலுவலக நிர்வாகிகள் பேசி வருகின்றனராம்.

தெளிவுபடுத்தும் விஜயகாந்த்
முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்தே பேசுவார் என்றும், விரைவில் நடக்கவுள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், இதுதொடர்பாக விஜயகாந்த் தெளிவுபடுத்துவார் என்றும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்டச்செயலாளர் வண்டு முருகன்.
அது என்னவோ காலையில் காமெடி சேனலில் இந்த சீனை போட்ட உடன் எனக்கு தேமுதிக தொண்டர்களின் நினைவு வந்தது. ஆனால் இதற்கும் விஜயகாந்தின் சமாதானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications