லோக்சபா தேர்தல் கூட்டணி- விஜயகாந்துக்கு முழு அதிகாரம்: தேமுதிக செயற்குழு தீர்மானம்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு வழங்கி தேமுதிக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தேமுதிக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் விஜயகாந்த்துக்கு செயற்குழு ஏகமனதாக வழங்குகிறது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதா?
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய மறுதினமே முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்துத் தள்ளியது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதைச் செயற்குழு கண்டிக்கிறது.

144 தடை உத்தரவுக்கு கண்டனம்
ஜாதிக் கலவரத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைச் செயற்குழு கண்டிக்கிறது.

மின் பிரச்சனை- தமிழக அரசுக்கு கண்டனம்
மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் அதிமுக அரசு, மத்திய அரசு மீது பழியைச் சுமத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயம் மற்றும் அனைத்து தொழிற்துறையையும் முடக்கியுள்ள சூழ்நிலையை உருவாக்கிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

மீனவர் பிரச்சனை
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். மத்திய அரசுக்குக் கடிதங்களை மட்டும் முதல்வர் ஜெயலலிதா எழுதிவிட்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் இந்தப் போக்கை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications