விழுப்புரம் கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை: விஜயகாந்த்
சென்னை: விழுப்புரம் அருகே 3 கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மூன்று மாணவிகள், தாங்கள் படித்துவந்த விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்துபோனது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இறந்த மாணவிகளின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போதுதான் அதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.
தமிழகத்தை சேர்ந்தவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சரியான உட்கட்டமைப்பு வசதியும், தேவையான அளவிற்கு அனுபவமிக்க பேராசிரியர்கள் இல்லாமலும் இக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாகவும், தமிழக அரசின் முறையான அனுமதியின்றி இக்கல்லூரி செயல்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.வி.எஸ் இயற்கை கல்லூரியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதில் படித்துவந்த மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்துள்ளனர். இந்நிலையில் மூன்று மாணவிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கல்லூரிக்கு அருகேயுள்ள கிணற்றில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இம்மூவரும் தங்கள் கைகளை தாங்களாகவே கட்டிக்கொள்ள ஒருசிறிதும் சாத்தியமில்லை. இந்நிலையில் இது கொலையா? தற்கொலையா எனத்தெரியாத நிலையில், இவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகிறது.
மாணவிகளின் செல்போன்கள் காணவில்லை என்றும், அவர்கள் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தின் விபரம் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை என்றும் இறந்த மாணவிகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி போன்ற விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் இதுவரை உண்மைநிலை கண்டறியப்படாமல் உள்ளதால், சி.பி.ஐ விசாரணைதான் இவ்வழக்கிற்கு உகந்ததாகும்.
அங்கீகாரம் இல்லாமல் இத்தனை நாட்களாக இந்த கல்லூரி நடைபெறுவதற்கு அதிமுக அரசு எப்படி அனுமதித்தது? மூன்று மாணவிகள் இறந்த பிறகு கல்லூரிக்கு சீல் வைக்கும் அதிமுக அரசு, இதற்கு முன்பு மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், கல்லூரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து விசாரித்தால், எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவ கல்லூரி குறித்து மாவட்ட நிர்வாகம் அனுப்பிய விசாரணை அறிக்கையின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது.
இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவிகள் இறந்து போயிருக்கவும்மாட்டார்கள், படித்து முடித்து தங்கள் குடும்பத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றியிருக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். இதையெல்லாம் இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு அதிமுக அரசு உரிய முறையில் தக்க இழப்பீடு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இந்த கல்லூரிக்கு சீல் வைத்ததோடு அரசின் கடமை முடியவில்லை. ஏற்கனவே இந்த கல்லூரியில் படிப்பதற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு படித்துவந்த மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் அரசு கல்லூரியில் படிப்பதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். இந்த சோகம் மறையும் முன்பே சென்னை அண்ணா பல்கலைகழக மாணவியர் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து இறந்துபோனார் என்ற செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்தும் அரசு உரிய விளக்கம் உடனடியாக அளித்திட வேண்டும். இனியும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழா வண்ணம் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் உரிய பாதுகாப்பு வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications