ஹிட்லர் ஆட்சி நடக்கிறது.. ஏன் இவ்வளவு பிடிவாதம்.. விஜயகாந்த் சாடல்
சேலம்: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இது ஹிட்லர் ஆட்சி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மது விலக்கு கோரி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தி பரிதாபமாக மரணத்தைச் சந்தித் சசிபெருமாள் குடும்பத்தினரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சசி பெருமாள் சொன்னதை கேட்டு உடனே மதுவிலக்கு செய்தால் அவருக்கு பெயர் கிடைத்துவிடும் என்று நினைக்கிறது அரசு. மதுவிலக்கு விசயத்தில் அரசு பிடிவாதமாக இருக்கிறது.
கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு காவல் இல்லை. எனக்கே போலீஸ் காவல் தர மறுக்கிறது. மற்ற மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சி ஹிட்லர் ஆட்சி என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த அம்மாவை ஹிட்லர் என்று மக்கள் சொல்வதுண்டு.
தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. ஆனால் அதிமுக அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவு, காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிரிழப்பாகும்.
தமிழக தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவும், இளைஞர்களை காக்கவும், மதுவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரணமதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, வருகின்ற 04.08.2015 அன்று தமிழகத்தில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, கலவரபூமியாக மாற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும். அரசியல் கட்சிகள் அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கை செய்கின்றேன்.
உடனடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications