வேட்பாளர் யாரென்றே சொல்லாமல் பொத்தாம் பொதுவாக பிரசாரம் செய்த விஜயகாந்த்
நாமக்கல் நாமக்கல்லுக்கு அறிவிக்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் திடீரென விலகி விட்ட நிலையில் புதிய வேட்பாளர் யார் என்று சொல்லாமல் வெறுமனே பேசி விட்டுப் போயுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அடுத்த வேட்பாளரை அறிவிக்கக் கூட தேமுதிகவில் ஆள் இல்லையா என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கும் நிலைக்கு நாமக்கல்லில் நேற்று நடந்த விஜயகாந்த் பிரசாரம் இருந்தது.
புதிய வேட்பாளரையும் அவர் அறிவிக்கவில்லை, தனது கூட்டணிக் கட்சிகளின் பெயரையும் அவர் சொல்ல விரும்பவில்லை. யாருக்காக அவர் பிரசாரம் செய்தார் என்பதே பெரும் ஆச்சரியமாகப் போய் விட்டது.

நாமக்கல் மகேஸ்வரன்
நாமக்கல் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மகேஸ்வரன். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் மகேஸ்வரன் போட்டியிலிருந்து விலகி விட்டார்.

ஆளே இல்லைன்னாலும் பிரசாரம் செய்வேன்
மகேஸ்வரனை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பிரசாரத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலகி விட்டதால் புதிய வேட்பாளரை அறிவித்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்யவில்லை விஜயகாந்த்.

சும்மா பேசினார்
நாமக்கல்லுக்கு திட்டமிட்டபடி வந்த அவர் அங்கு வேட்பாளர் பெயரைச் சொல்லாமல் வெ்றுமனே பிரசாரம் செய்தார்.

சொல்லிட்டேன் பேசிட்டுப் போய்டறேன்
நேற்று அவர் தனது பிரசாரத்தைத் தொடங்கியபோது, நான் 40 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். அத்தனை தொகுதியிலும் நான் வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள். அதை பூர்த்தி செய்யவேண்டும். அதனால் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை செய்கிறேன்.

யாருக்கு ஓட்டுப் போடனும் கேப்டன்...
வேட்பாளரே இல்லாததால் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்கிறேன் என்று நினைக்கவேண்டாம் என்று அவர் கூறியபோது, நாங்கள் யாருக்கு ஓட்டு போடவேண்டும்? என்று தேமுதிகவினர் குரல் எழுப்பினர். இதைப் பார்த்த விஜயகாந்த், யார் வேட்பாளர் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும். நீங்கள் எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள் என்று கூறினார்.

ரொம்பக் குழப்புதே
நாமக்கல் தொகுதி தேமுதிகவுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் தேமுதிகதானே வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கும் வேட்பாளர் என்று ஏன் விஜயகாந்த் கூறினார் என்பது தொண்டர்களுக்கேப் புரியவில்லை.

அத்தோடு நிற்கவில்லை குழப்பம்
குழப்பம் அத்தோடு நிற்கவில்லை. தனது கூட்டணிக் கட்சிகளின் பெயரைச் சொல்வதாக ஆரம்பித்த அவர் திடீரென, தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் சொல்லவில்லை. ஏதாவது ஒரு கட்சியின் பெயரை நான் சொல்லாமல் விட்டுவிட்டால், அதையே பிடித்துக் கொண்டுவிடுவார்கள். அப்புறம் அது இது என்று கதை கட்டி பிரச்சனையை ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் பொதுவாக தேசிய ஜனநாயக கூட்டணி என்றே சொல்லிவிடுகிறேன் என்று கூறினார்.
இப்படியாக நேற்று நாமக்கல்லில் விஜயகாந்த்தின் பிரசாரம் படு விமரிசையாக நடந்தேறியது.












Click it and Unblock the Notifications