ஏன் தோற்றோம்?.. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று முதல் 2வது கட்ட ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சியின் உள்ளாட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 20ம் தேதி வரை ஆலோசனை நடத்துகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்து 104 தொகுதிகளில் போட்டியிட்டு 104 தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவியது தேமுதிக. இதில் விஜயகாந்த்துக்கே டெபாசிட் பறிபோய் பெரும் கேவலமான நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கடந்த மே 23ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். அப்போது கூட்டணி சரியாக அமையாமல் போனதால்தான் தோற்றோம் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். திமுக கூட்டணியில் நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் பலரும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாக சமீபத்தில் வெளியே வந்த விஜயகாந்த் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவேன் என்றும் விஜயகாந்த் கூறினார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆலோசனையில் விஜயகாந்த் இறங்கியுள்ளார்.
இன்று முதல் 20ம் தேதி வரை கட்சியின் உள்ளாட்சி அளவிலான அதாவத ஊராட்சி, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நாம் ஏன் தோற்றோம், என்ன செய்திருக்க வேண்டும், என்ன செய்யத் தவறினோம் என்பது உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கிறார் விஜயகாந்த். கூட்டத்திற்குப் பின்னர் அவர் தனது அடுத்த கட்ட உத்திகள் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த உத்திகளையும், திட்டங்களையும் அவர் அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications