பாஜகவை ஆதரித்துப் பிரசாரம் செய்யலாமா?... மா.செ.க்களுடன் விஜயகாந்த் ஆலோசனை
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தருவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசினார் விஜயகாந்த்.
இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு வந்தார் விஜயகாந்த். அதற்கு முன்னதாக மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
கிட்டத்தட்ட 70 பேர் இதில் கலந்து கொண்டனராம். கொ.ப.செ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த்.
அதில் ஒன்று ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்துப் பிரசாரம் செய்வது தொடர்பானது. அதேபோல கட்சியில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் உள்ள நிர்வாகிகளை தூக்கியடிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளாராம். அதுகுறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாம். யாரெல்லாம் "வெட்டி"யாக இருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டையும் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டு வாங்கினாராம் விஜயகாந்த்.
முன்னதாக செல்போன்களை எடுத்து வரக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் யாரும் செல்போனை எடுத்து வரவில்லை. எடுத்து வந்தவர்களும் வெளியில் கொடுத்த பின்னரே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.