இந்தியாவிலேயே 'தில்'லான மனுஷன் விஜயகாந்த் ... டி.ஆர்.!
சென்னை: மது குடிப்பவர்கள் குறித்து துணிச்சலான கருத்து தெரிவிப்பதற்கு இந்தியாவிலேயே விஜயகாந்தை போன்று யாரும் இல்லை. தமிழக மக்கள் அந்த துணிச்சலை அவருக்கு அளித்துள்ளார்கள் என்று கூறியுள்ளால் நடிகர், இயக்குநர், தமிழ் ஆர்வலர், லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை ஏதோ ஒரு புகார் கொடுப்பதற்காக வந்தார் ராஜேந்தர். ஆனால் அவர் வந்த நேரத்தில் கமிஷனர் அங்கு இல்லை. இதையடுத்து மனு கொடுக்காமலேயே திரும்பினார் ராஜேந்தர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகளே இன்னும் தெளிவான முடிவு எடுக்காமல் உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்களை லட்சிய திமுக ஒருங்கிணைக்கும்.
ஈழப்பிரச்சனைக்காக எனது சிறு சேமிப்புத்துறை பதவியை துறந்தவன் நான். இந்த தேர்தலில் என்னை பிரசாரத்துக்கு அழைக்கும் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பேன். தேர்தலில் சீட்டு வாங்காமல் ஓட்டு கேட்கும் நிலையில் லட்சிய திமுக இல்லை.
மதுகுடிப்பவர்கள் பற்றி விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்கிறீர்கள். இது போன்ற துணிச்சலான கருத்து தெரிவிப்பதற்கு இந்தியாவிலேயே விஜயகாந்தை போன்று யாரும் இல்லை. தமிழக மக்கள் அந்த துணிச்சலை அவருக்கு அளித்துள்ளார்கள் என்றார் அவர்.
என்ன புகார் கொடுக்க வந்தார் ராஜேந்தர்....
முன்னதாக கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ராஜேந்தரிடம் கமிஷனர் வெளியில் போயிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவத்தை சந்திப்பதற்காக 3வது மாடிக்கு டி.ராஜேந்தர் சென்றார். ஆனால் அவரும் அங்கு இல்லை.
இதையடுத்து வெளியே வந்தார் ராஜேந்தர். அவரிடம் என்ன புகார் கொடுக்க வந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, போலீஸ் கமிஷனரை சந்தித்து இன்று புகார் மனு கொடுப்பதற்காக நான் வந்தேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே நாளை வந்து புகார் அளிக்க உள்ளேன். அதிகாரிகளிடம் புகார் கொடுத்த பின்னர்தான் அது என்ன புகார் என்பதை தெரிவிப்பேன் என்று கூறி விட்டுச் சென்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications