தனித்துப் போட்டி முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் திடீர் கோரிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திடீரென வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று திமுக, பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆகியவை தொடர்ந்து அழைப்பு விடுத்தன. இந்நிலையில் தனித்துப் போட்டி; தமது தலைமையில் ஒரு அணி என்ற முழக்கத்தை முன்வைத்தார் விஜயகாந்த்.

இதனை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார். மேலும் விஜயகாந்த் வெளிப்படையாக மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணையவேண்டும். அப்படி விஜயகாந்த் இணைந்தால் அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த உடன்பாடும் இல்லை என்பதையும் தேமுதிக தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications