நான் இப்ப எந்தக் கூட்டணியிலும் இல்லை.. விஜயகாந்த்
சென்னை: நாங்கள் தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை, கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நேற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் அவர்களை கைது செய்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கொண்டு வந்து விட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அதே இடத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை, விஜயகாந்த் நேரில் சந்தித்து அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
கேள்வி: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய மாணவ-மாணவிகள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து?
பதில்: அதிகாரிகளை சொல்லி என்ன ஆகப்போகுது. முதல்வர் உத்தரவு பிறப்பிக்கிறார். கீழ்ப்படிந்து அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
கேள்வி: மது விலக்கு வந்தால் கள்ளச்சாராயம் வந்து விடுமே?
பதில்: கள்ள சாராயம் எப்போது தான் இல்லாமல் இருந்து இருக்கிறது. எப்படி தடுத்தாலும் அது வரத்தான் செய்யும்.
கேள்வி: திமுக, அதிமுகவினரின் மது ஆலைகள் குறித்து?
பதில்: அதிமுக, திமுக இருக்கும் வரை பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது. அதிமுக, திமுகவை சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் மது தொழிற்சாலைகளை மூடினால் ஓரளவு மதுவிலக்கை கொண்டு வந்துவிடலாம். இதில் திமுகவை சேர்ந்தவர்கள் வேண்டுமானால் அந்த தொழிற்சாலையை மூடுவார்கள். ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்கள் செய்யமாட்டார்கள்.
கேள்வி: பூரண மதுவிலக்கை கொண்டு வர அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைந்து போராடுவீர்களா?
பதில்: நான் செய்தால் ஏதோ கூட்டணி அமைக்கிறார் என்று நீங்களே கூறுவீர்கள். எல்லோரும் ஒருங்கிணைந்து போராட வந்தால், நானும் போராடுவேன்.
கேள்வி: இப்போது எந்தக் கூட்டணியில் உள்ளீர்கள்?
பதில்: கூட்டணி பற்றி இப்போது பேச விரும்பவில்லை. தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications