காவிரி: அடித்துக் கொள்ளும் கர்நாடகா- தமிழகம்... இது இந்தியாவா? வேற நாடா? விஜயகாந்த் ஆவேசம் #cauvery
ஆத்தூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடகாவும் தமிழகமும் அடித்துக் கொள்ளக் கூடாது; இது இந்தியாவா? வேற நாடா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் ஆத்தூரில் நேற்று தேமுதிக சார்பில் பக்ரீத் பெருநாள் குர்பானி வழங்கும் விழா மற்றும் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
பல ஆண்டு பிரச்சனை
கர்நாடகா- தமிழகம் இடையே காவிரி பிரச்சினை பல ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இங்கு மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுகவும் திமுகவும் காவிரி நீரை கொண்டுவருகிறோம் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஜூலை, ஆகஸ்ட்னா....
ஆனால், ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே சம்பா சாகுபடிக்கு நீல் இல்லை என்று பிரச்சினை வந்துவிடுகிறது. மழை பெய்ய ஆரம்பித்ததும் பிரச்சினை மறக்கப்படுகிறது.
மாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்சனை
நைல் நதி நீரை 3 நாடுகள் பிரச்சினையின்றி பங்கிட்டுக் கொள்கின்றன. காவிரி விவகாரம் தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை. ஒரே நாளில் 40,50 பஸ்களை எரிக்கிறார்கள்.
இந்தியாவா? வெளிநாடா?
ஏன் இப்படி? இது அண்ணன், தம்பி பிரச்சினை. இது இந்தியாவா? வெளிநாடா? ராமநாதபுரம் மீனவர்கள்னா இரு நாட்டு பிரச்சனைன்னு சொல்லலாம்...
ஒற்றுமையாக இருப்போம்
காவிரி நீரை பங்கிட்டுக்கொள்வதில் நமக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை வெளிநாட்டினர் பார்த்தால் இந்தியாவைப் பற்றி என்ன நினைப்பார்கள். வேற்றுமைகளை மறந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.