"கீழே" போய் விட்ட தேமுதிகவை "மேலே" கொண்டு போக விஜயகாந்த் செம ஐடியா!
சென்னை: எத்தைத் தின்றால் பித்தம் கழியும் என்ற நிலையில் தேமுதிக உள்ளது. சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி வாங்கிய அடியை யாருமே மறக்க முடியவில்லை. மேலும் கட்சியும் தாறுமாறாக பிளந்து போய் விட்டது. இந்த நிலையில் ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கை வைத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி அலுவலகத்தை மாற்றும் முடிவில் இருப்பதாக ஒரு செய்தி ஓட ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே கட்சியை பாஜகவுடன் போய் இணைத்து விட விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி ஓடிக் கொண்டுள்ளது. அந்த செய்தியுடன் தற்போது கட்சி தலைமை அலுவலகத்தை (அதாவது முன்னாள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்) மாற்றி விட அவர் முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி சேர்ந்துள்ளது.
தற்போதுள்ள தலைமை அலுவலகத்தை அப்படியே வணிக வளாகமாக மாற்றும் திட்டத்தில் விஜயகாந்த் உள்ளதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
வாஸ்து சரியில்லை பாஸு
இப்படியொரு முடிவுக்கு விஜயகாந்த் வர முக்கியக் காரணம்.. வாஸ்து பிரச்சினைதான் என்றும் சொல்கிறார்கள். அதாவது இந்த அலுவலகத்தில் வாஸ்து சரியில்லை என்று யாரோ கொளுத்திப் போட்டுள்ளனர். எனவேதான் கட்சி அலுவலகத்தை மாற்றும் முடிவுக்கு விஜயகாந்த் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எதுவுமே சரியில்லை
மேலும் கட்சி அலுவலகத்தில் வைத்துத்தான் பல முக்கிய முடிவுகளை எடுத்தேன். ஆனால் எதுவுமே எனக்கு சாதகமாக வரவில்லை. எனவே வாஸ்து பிரச்சினையால்தான் குழப்பம் என கருதுகிறேன் என கட்சியின் முக்கியஸ்தர்களிடம் கூறினாராம் விஜயகாந்த்.
கீழே வேண்டாம்.. மேலே போ!
தற்போது இந்த இடத்தை காலி செய்து விட்டு இதை பிரமாண்டமான வணிக வளாகமாக அதாவது மாலாக மாற்ற விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வணிக வளாகத்தின் மேற்பகுதியில் கட்சியின் அலுவலகத்தை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். அதாவது தற்போது "கீழே" போய் விட்ட தேமுதிக.. வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு "மேலே" போகப் போகிறது!
வாயும் சரியில்லையே!
வாஸ்து சரியில்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. தேர்தல் சமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பிரசாரச் சமயத்தில் விஜயகாந்த்தின் "வாய்" சரியில்லையே என்பதை யாராவது அவர்களிடம் எடுத்துச் சொன்னார்களா என்று தெரியவில்லையே!