...த்தூ விவகாரம்... எதற்காக யாரிடம் நான் மன்னிப்பு கேட்கனும்?- விஜயகாந்த் 'தெனாவெட்டு'
தஞ்சாவூர்: பத்திரிகையாளர்களை ......த்தூ என காறித் துப்பிவிட்டு இப்போது நான் எதற்காக யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெனாவெட்டாக பேசி வருகிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த்திடம் கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டு வந்தது. இதில் நிதானம் இழந்த விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து ...த்தூ..... என காறி உமிழ்ந்தார்.
இது பத்திரிகையாளர்களிடையே மிகக் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு பத்திரிகை சங்கங்களும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆனால் இதை விஜயகாந்த் நிராகரித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இது குறித்து விஜயகாந்த் பேசியதாவது:
கேப்டன், டிவியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. அதில் நான் கவனம் செலுத்துவதும் கிடையாது. சில பத்திரிகைகள்தான் என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக செய்தி போடுகின்றன.
அவர்கள் டேபிளில் அமர்ந்து கொண்டு செய்தி தயாரிக்கின்றனர். அதனால் தான் அப்படி செய்திகள் எழுதப்படுகின்றன.
நான் பத்திரிகையாளர்களை அவதுாறாக பேசியதாகவும், நடந்து கொண்டதாகவும் என்னை நோக்கி கொந்தளிக்கின்றனர். மன்னிப்பு கேட்க கோருகின்றனர். யாரிடமும் எதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என்ன சொன்னேனோ அது சரிதான். நியாயமானது தான்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.