தமிழ்நாட்டுக்கு நான் வேண்டும், இந்தியாவுக்கு மோடி வேண்டும்-விஜயகாந்த்
சேலம்: தமிழகத்துக்கு நன்மை செய்ய விஜயகாந்த் வேண்டும், இந்தியாவுக்கு நல்லது செய்ய மோடி வேண்டும் என்று சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜயகாந்த் மேலும் பேசியபோது, ''சேலம் மாநகரில் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. தனிக் குடிநீர் திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. பாதாள சாக்கடைத் திட்டமும் நிறைவேற்றவில்லை. மழை பெய்தால் சாக்கடைகளில் வெள்ளம் பெருகி வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. கலை நகரமாக இருந்த சேலம் இப்போது கொலை நகரமாக மாறியுள்ளது. ஜவுளி தொழில், வெள்ளி வியாபாரம், ஜவ்வரிசி தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நசிவடைந்துள்ளன.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் தயாரிப்புக்கான நிலக்கரியின் அளவில் ஊழல் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தரமற்ற நிலக்கரி வாங்கப்படுகிறது.
இதனால்தான் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் 2016 ஆம் ஆண்டு பிரசாரத்துக்கு வரும்போது என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு இருவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு நன்மை செய்ய விஜயகாந்த் வேண்டும். இந்தியாவுக்கு நல்லது செய்ய மோடி வேண்டும். வேட்பாளர் பட்டியலை அடுத்த 2 நாள்களில் நான் அறிவிப்பேன். இல்லாவிட்டால் பாஜக அறிவிக்கும். நான் ஆயிரம் மடங்கு வேலை செய்தால் தொண்டர்களான நீங்கள் 2 ஆயிரம் மடங்கு வேலை செய்ய வேண்டும்.
நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுகவை வீழ்த்துவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்'' என்றார் விஜயகாந்த்.