குருவும்.... 50 சீடர்களும் கதை சொன்ன விஜயகாந்த்.. விசிலடித்ததால் டென்ஷனானார்!
திருப்பத்தூர்: அதிமுக, திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், குருவும் 50 சீடர்களையும் பற்றி குட்டிக்கதை கூறி அசத்தியுள்ளார். வேலுாரில் நடந்த மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் திமுக அதிமுக குறித்து விஜயகாந்த் கூறிய குட்டிக்கதையை பொதுமக்கள் ரசித்து சிரித்தனர்.
திருப்பத்தூரில் தே.மு.தி.க - ம.ந.கூ பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான்கு மணிக்கு நடைபெறும் என்று கூட்டத்திற்கு விஜயகாந்த் இரவு 8.10 மணிக்கு வந்தார். கூட்டத்தை பார்த்து பெரிய கும்பிடாக போட்டுவிட்டு காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
தொண்டர்களிடமிருந்து விசில் சத்தம் வரவே டென்ஷனானார். எங்க கட்சி கட்டுபாடோட இருக்கு. கூட்டணி கட்சியும் அந்த கட்டுப்பாடோட நடந்துக்கனும் என்று கூறிவிட்டு முறைத்தார். பின்பு சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு குட்டிக் கதை ஒன்றை சொன்னார்.
ஒரு குரு தனது சீடர் 50 பேரிடம்...50 பேரோ 100 பேரோ. மாம்பழமோ என்னமோ ஒரு பழத்தை கொடுத்து மறைவான இடத்தில் சாப்பிட சொன்னார். அதுல ஒருத்தன் மட்டும் திரும்பி குருக்கிட்டயே வந்தான்.
ஏன் உனக்கு மறைவான இடம் கிடைக்கலயா எல்லாரும் இடம் புடிச்சிட்டாங்களான்னு கேட்டார். 'எப்படி மறைஞ்சு சாப்பிட முடியும் எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கிட்டிருக்கானேனு அந்த பையன் சொன்னான்.
அது போல தி.மு.க., அ.தி.மு.க செய்யும் தவறுகளை மேல இருந்து பார்த்துக்கிட்டிருக்கான் என்று கூறினார் விஜயகாந்த். அப்போது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விசில் பறந்தது.
இந்த அம்மா ஹெலிகாப்டரில் உச்சி வெயில் 1 மணிக்கு வந்து ஏர்கூலரில் உட்கார்ந்துகிட்டு உங்களால் நான். உங்ளுக்காக நான்னு பேசுறாங்க.
3 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு 11 மணிக்கே நூறுக்கும்.. பீருக்கும்..சோறுக்கும் கூட்டத்தை அழைச்சிட்டு வராங்க இவங்களுக்கு ஒட்டு போடனுமா. நீங்க எதுக்கு ஓட்டு போடனும் சொல்லுங்க? என்று கூட்டத்தை பார்த்து கேட்டவர்.
மக்கள் நலக்கூட்டணி அந்தந்த சின்னத்தில் ஓட்டு போடுங்க. திரும்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும் என்று பேச்சை முடித்துக்கொண்டார்.