நாடும், தமிழகமும் நல்லா இருக்க இந்த 4 கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க மக்களே.. விஜயகாந்த் நறுக் பேச்சு
தமிழகமும், இந்தியாவும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் எதை செய்யக் கூடாது என்பது குறித்து விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி: காரைக்குடியில் இன்று நடைபெற்று வரும் தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்.
தேமுதிகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது. இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது.
மு.க. ஸ்டாலினுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்படும் கூட்டம். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை மறுநாள் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின்னர், நீட்தேர்வு கொண்டு வந்தால், தேமுதிக ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.