உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டாம்: தேமுதிக தொண்டர்களுக்கு கேப்டன் உத்தரவு
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் யாரும் போட்டியிட வேண்டாம் என மாவட்ட செயலர்கள் மூலம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
தமிழகத்தில், காலியாகவுள்ள உள்ள கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட மேயர் பதவிகள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.
ஏற்கனவே, இத்தேர்தலை தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., புதிய தமிழகம், ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. பாரதீய ஜனதா கட்சி இத்தேர்தலை சந்திப்பது குறித்து குழு அமைத்து ஆலோசித்து வருகிறது. இக்குழுவில் உள்ளவர்கள் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்திருந்த மற்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஆதரவு வேண்டி...
அந்த வகையில், இந்தக் குழுவினர் நேற்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர். கட்சியினரிடம் கலந்து ஆலோசித்து விட்டு முடிவைத் தெரிவிப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் விஜயகாந்த்.

உத்தரவு...
அதன் தொடர்ச்சியாக, தனது கட்சி மாவட்ட செயலாளர்கள் மூலம், 'உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் யாரும் போட்டியிட வேண்டாம்' என கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாராம்.

வாபஸ் பெற வேண்டும்...
முன்னதாக கட்சியினர் யாராவது வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், உடனடியாக அவற்றை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளாராம்.

பாஜகவுக்கு ஆதரவு..
பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடனேயே விஜயகாந்த் இவ்வாறுத் தெரிவித்துள்ளதாக அவரது கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications