நான்கு ஆண்டு கால வேதனை... அதிமுக அரசு வாய்ஜாலத்தில் காலம் கடத்துகிறது: விஜயகாந்த்
சென்னை: தே.மு.தி.க.வின் கேள்விகளுக்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாத முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., ஆட்சியின் குறைகளை சொல்லியே, தப்பித்துக் கொள்வது என்ன நியாயம்' என, தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகாலமாக அதிமுக அரசு வாய்ஜாலத்திலேயே காலத்தை கடத்தி விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன், வலங்கைமான் ராஜாங்கம் போன்ற விவசாயிகள், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தற்கொலை செய்துள்ளனர். இதுபோன்று, மேலும் பல தற்கொலைகள் நடந்துள்ளன. ஆனால், 'அவர்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டனர்' என, அரசும், போலீசாரும் மூடி மறைப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வாய் ஜாலம்
விவசாய பணிகளுக்கு, எந்த அடிப்படை ஏற்பாடுகளையும் செய்யாமல், வாய் ஜாலத்திலேயே, இந்த அரசு காலத்தை கடத்துகிறது. மேட்டூர் அணையை திறந்தால் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு உரிய கால்வாய்களில் நீண்ட நாட்களாக தூர்வாரவில்லை.

தண்ணீர் செல்ல வழியில்லை
கால்வாய்களில் வண்டல் மண் படிந்து, ஆகாயத்தாமரைகளும், பிற செடி கொடிகளும் மண்டிக்கிடக்கிறது. தூர்வாருதல், மதகுகளை பழுது பார்த்தல், கரையை பலப்படுத்துதல் போன்ற அடிப்படை பணிகள் எதையுமே செய்யாமல் வாய்ஜாலத்திலேயே இந்த அரசு காலத்தை கடத்துகிறது.

பயிர்க்கடன் கொடுக்கவில்லை
5 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை, விவசாய இடுபொருட்களும் சரிவர கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நான்காண்டு வேதனை
விவசாயிகளின் நான்காண்டு வேதனைகளை கண்டுகொள்ளாமல் சுயநலத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை பயன்படுத்திகொள்ளும் போக்கை கைவிட்டு, அவர்களின் இன்னல் தீர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications