என்னை குடிகாரன் என்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?: சவால் விட்ட விஜயகாந்த்
சேலம்: தமிழகத்தை மாறி, மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. தமிழகத்தை சீரழித்து விட்டார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
என்னை குடிகாரன் என்று விமர்சிக்கும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? என்றும் அவர் சவால்விட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிமுக – திமுக
கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ''தமிழகத்தில் வறுமை இன்னும் ஒழிய வில்லை. இதனால் தான் நான் மக்களின் வறுமையை போக்கும் வகையில் சிறு,சிறு உதவிகளை செய்து வருகிறேன் என்றார். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திற்கு பிறகு, தமிழகத்தை மாறி, மாறி ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. தமிழகத்தை சீரழித்து விட்டார்கள்.
எல்லோருக்குமே நெருக்கடி
சமீபத்தில் இறந்த திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஆட்சியாளர்களின் நெருக்கடிக்கு உள்ளானார். இதேபோல் தற்போது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு வகையில் நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது. ஏன் அமைச்சர்களுக்கு கூட இந்த நெருக்கடி உள்ளது. இந்த ஆட்சியால் மக்களுக்கு நெருக்கடி அதிகமானால் இந்த ஆட்சியை மக்கள் மாற்றி விடுவார்கள்.
நான் கோபக்காரனா?
எனது தொண்டர்களிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதாக சிலர் பேசுகிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.என்னை பொறுத்தவரையில் தொண்டர்களிடம் நான் உரிமை எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு விமர்சிப்பவர்களை பெரிதாக கருதவில்லை. காய்த்த மரத்தில் தான் கல்லடிபடும்.
விஜயகாந்த் சவால்
தற்போதைய ஆட்சியாளர்கள் மதுவிலக்கை அமல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. என்னை குடிகாரன் என்று விமர்சிப்பவர்களுக்கு நான் நேரடியாக சவால் விடுக்கிறேன். என்னை குடிகாரன் என்று குறை கூறும் அமைச்சர்கள் யாரேனும் என்னுடன் மருத்துவ பரிசோதனைக்கு உடன் பட தயாரா? இந்த கூட்டத்தின் மூலம் அவர்களுக்கு நான் நேரடியாக அழைப்பு விடுக்கிறேன் என்று ஆவேசமாக சவால் விட்டார் விஜயகாந்த்.