டெங்கு காய்ச்சல் பற்றிய உண்மைத் தகவல்களை மறைப்பதா?: விஜயகாந்த் சாடல்
கும்பகோணம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை தகவல்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறாமல் மறைப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உயிரிழப்புகள் தொடர்வதாக கூறினார். டெங்கு காய்ச்சலே இல்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்கு மாறாகப் பேசுவதாகவும் விஜயகாந்த் புகார் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மதுவகைகளை விற்பனை செய்து, தமிழக அரசு லாபம் சம்பாதிப்பதாகவும், ஆனால் 3 கோடி ரூபாயில் செலவில் மது குடிக்க வேண்டாம் என விளம்பரம் செய்வது போலித்தனமாக உள்ளது என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் மோசடி நடக்கிறது. சோழநாடு சோறுடைத்தது என்பார்கள். முப்போகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கருக்காவாக இருக்கிறது என்று கூறி குறைந்த விலையில் கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சி செய்து விட்டார்கள். ஆனால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. கடைமடை பகுதி வரை தண்ணீர் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்படவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை நன்றாக வாழ வைப்போம்.
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, மண்எண்ணெய் என எந்த பொருட்களும் சரிவர கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் குறை சொல்கின்றனர். சத்துணவு திட்டத்தை தந்த தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் சத்துணவு கூடம் இல்லாமல் கட்டிடத்தை கட்டி இருக்கின்றனர். 2016ம் ஆண்டு தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்று அ.தி.மு.க.வினர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications